Tuesday, 19 March 2019

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம்.
அவை விடுமுறையை வெறுத்த காலம், அலங்காரம் ஆணுக்கும் உண்டென அறிந்த காலம்...

நிசப்தமான நேரத்தில் நின்னை கான நிரப்பாத தாளோடு காத்திருந்தேன் தேர்வறையில் அந்நாளில்.  இன்று உரைநடையாய் தெரிகிறது உன்னோடு நடைபோட்ட அந்நாட்கள்.

ஆண்டொன்று ஆனபின் அலைபேசியின் அத்தியாயத்தில் குலசாமியாய் தெரிந்தது குறுந்தகவல். அது இலவசம் ஆனதும், காலப்போக்கில் அது அவள் வசம் ஆனதும் காலத்தின் ஜாலம்.

இலக்கணம் பேசிய இரு விழிகளுக்கு உரையாடலெல்லாம் உருவகமானது. அவள் உவமைக்காகவே என் அகராதியும் பெரிதானது.

விடைபெறும் வேளையில் வினா போடும் என் ஏக்கத்திற்கு உன் கடை விழிப்பார்வை விடை.

பாவையரின் மத்தியிலும் பாதரசம் அவள் விழி. அவள் பார்வை படும் இடமெல்லாம் பதிந்த என் காலடி, அது காதலடி.

என் காதல் கடலில் ஆர்ப்பரித்த அலைகளில் காம நுரையில்லை, ஆதலால் கரையில் கறையில்லை...

மறுக்கப்பட்ட காதலின் மறுபெயர் நட்பானது. மாதங்கள் செல்லச் செல்ல மறுசுழற்சி, அது மனக் கிளர்ச்சி. ஓயாத உரையாடலில் ஒருமுறையேனும் உதிராத அவ்வார்த்தைகள். கட்டுப்பாடோ, வார்த்தை தட்டுப்பாடோ அவளே அறிவாள்.

இன்று அவளைப் போலவே அழகாய் தெரிகிறது அச்சிடப்பட்ட அவள் பெயர் அழைப்பிதழில்.

காதலில் கடைசியில் பொய்யாக பூத்த புன்னகையில் அழகில்லை.

இனி கனவுக்கு பழக்க வேண்டும், நடைபோட நான் மட்டுமே உள்ளேன் என...
கற்பனைக்கு பழக்க வேண்டும், எழும் வினாக்களுக்கு என்னிடம் விடையில்லையென...

மாலையில் பூத்து அவள் மாலையில் மறுபடி பூத்த பூக்களும், மஞ்சள் குளித்த மாங்கல்யமும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.

பெற்றோரின் பேரின்ப அலை, அவளை கணவரின்பால் கரை சேர்க்கிறது.

நாவினிற்கும் நன்னீரும் நாளடைவில் கடல் சேரும்.

என் சிந்தனை சிறையின் ஆயுள் கைதிக்காக இவ்வரிகளோடும், கசக்காத காதலோடும், நிதர்சனத்தின் நிலையறிந்து நினைவுகளை மட்டும் களவாடி புன்னகையோடு விடைபெற்ற...

அதியமான் அண்ணாதுரை

Thursday, 7 June 2018

நீங்கா நினைவுகள்....

நீங்கா நினைவுகள்....

தாயைப் போல் தாலாட்டவில்லை, பாலூட்டவில்லை. இருந்தும் எப்படி உருவானது இந்நேசம். கருவோடு கலந்தாயோ...

வாயுறைக்க மறுத்த வார்த்தையெல்லாம் நாட்குறிப்பில் கொட்டித் தீர்த்தாயோ, நாளை நான் படிப்பேன் என்று...

தெரு முக்கில் நீ வருவதறிந்தால் முன்டியடித்து உனைத் தொட உடன்பிறந்தவளோடு ஒரு போட்டி, வெற்றி எனதறிந்தும்...

நீ வாங்கி வரும் பண்டத்தை புசிக்க, பசியில்லை எனக்கூறி வாசலைப் பார்த்த காலமும் உன்டு. உறங்கிப்போனாலும் நீ ஊட்டிவிடும் பொழுது அரைப்பதத்தில் அசை போட்ட காலம் ஏக உண்டு...

அலுவலகம் செல்கையில் நீ கொடுக்கும் ஒற்றை ருபாய்,
சவரம் செய்யாத முகம், கருப்பு தேகம், சாயம் போன உள் பனியன், முதல் இரண்டு பொத்தானுக்கு என்றுமே விடுமுறை விட்ட கோடு போட்ட அரைக்கை சட்டை, பொடனியில் கொட்டித் தீர்த்த கோகுல் சாண்டில் பவுடர், தேய்ந்த தோள் செருப்பு, நடக்கும் பொழுதெல்லாம் உன்னோடு ஓடிய டைட்டன் கடிகாரம், சிவப்பில் ஒன்று, நீலத்தில் ஒன்றென நின்றிருக்கும் ரெனால்ட்ஸ் பேனா, இன்னும் ஏராள நினைவுகள் என்னுள்ளே உனைப் பற்றி...

சர்க்கரை நீருக்கும் நிக்காத விக்கலைக் கண்டு, காலையில நினைக்குறது எவனோன்னு நான் நினைச்சா, எமனோன்னு புரிய எட்டு நாள் ஆச்சுதப்பா.

காணிக்கைய வாங்கிட்டு கடவுள் வரம் கொடுக்கலையே, காப்பாத்த கடவுள் ஒன்னும் டாக்டருக்கு படிக்கலையே...

வெள்ளிக்கிழமை காலையில விடிஞ்ச வீதி பாக்கையில விவரம் எனக்கு புரிஞ்சு போச்சு. உன் விதியும் இப்போ முடிஞ்சு போச்சு.. வாசலுல நான் வர, அப்பன பாரு, அப்பன பாருனு அத்தைமாரு அழைக்கையில, ஆண்டு பத்து பாத்த உனக்கு அறிமுகம் எதுக்குன்னு கிட்ட வந்து பாக்கையில, கிறுகிறுன்னு வருவதேனோ.. கடைசியா உனை பாக்க கண்ணீர் வ(வி)ழி மறுப்பதேனோ.....

மறுமொழியில்லா உன்னிடத்தில் மகனின் கடைசி வார்த்தை "அப்பா"...

அப்பா.... உன் தோள் அமர்ந்து அண்டத்த பார்த்ததில்ல, ஆசையா நீ பேசி அதிகமா கேட்டதில்ல, ஒன்னா சேர்ந்து ஒரு சினிமா பார்த்ததில்ல. ஊருபட்ட ஆசையெல்லாம் உன்னோட புதைய கண்டு புள்ள மனம் குமுறுதப்பா.

சுயநினைவிழந்து, சுற்றத்து உறவுகளையும் மறந்து, என் வயதில் எதிரே வந்த ஏதோ ஒரு சிறுவனை என் பெயரிட்டு அழைத்தாயே,  இது ஒன்று போதாதா உனதன்பை எடுத்துரைக்க...

உனதன்பிற்கும், உன்மீது கொண்ட எனதன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ். உண்மையான அன்பிற்கு உருவமெதற்கு உவமையாக நான் இருக்க...‌

அண்டத்தில் உள்ள ஆயிரம் நட்சத்திரத்தில் நீயும் ஒருவனனால் அண்ணாந்து பார்ப்பதில் சிரமமில்லை எனக்கு...

அவ்வப்போது கற்பனைக் கடலில் மூழ்கி அப்பா உனைத்தேடும்,

அதியமான் அண்ணாதுரை

Sunday, 15 April 2018

நான் மற்றும் நான்...

தனிமையின் பால் தகை கொண்டேன். அங்கு நானும் நான் விரும்பிய நானும் மட்டும் நாழிகை பாராது நகைபாடி நடைபோட்டோம்..

பரந்த உலகம் கண்முன் இருந்தும் பார்வையில் தழும்பிய தனிமை தவிர்க்க நான் வந்தேன் எனை அணைக்க.

ஒவ்வொரு உரையாடலிலும் ஒரே முகம், அது என் முகம். முன் கண்ணாடி இல்லை, இருந்தும் எப்படி என் முகம். அம்முகம் சுளியவில்லை என் உளறல்களுக்கு. ஏன்... ஏன் எனில் அது நான் விரும்பிய நான்.

இலவச இணைப்பாய் எங்கு சென்றாலும் உடன் வருகிறது நான். ஏன்... ஏன் எனில் என் உரையாடலில் உளறல்களும், உள்ளக்குமுறல்களும் அதிகம். அதை நான் விரும்பிய நான் கேட்பான் சற்றும் சளைக்காமல்.

இந்த நாடோடிக் கூட்டத்தோடு நானும் ஒருவன் என நடிக்க பலமுறை கொன்றிருக்கிறேன் நான் விரும்பிய நானை. இருந்தும் அவன் எனை பிரம்மனாக்கி பிறப்பெடுப்பான் மீண்டும் மீண்டும்.

எதிர்பார்ப்பில்லா ஒருவன் என் பிம்பத்தில் எனக்காய் நான் படைத்த நான் விரும்பிய நான்.  பிம்பம் ஒன்றெனினும், அவன் என் பிரதிபலிப்பல்ல, நான் அழுதால் தேற்றுவான், சிரித்தால் போற்றுவான்.

நான் பழகியதில் நடிக்கப் பழகாத ஒருவன் நான் விரும்பிய நான்.

                                 நானும் விரும்பிய நானும்,
                               அதியமான் அண்ணாதுரை

Friday, 29 December 2017

அப்பா.... என் முதல் எழுத்துக்கள்

அப்பா,

ஆண்டுகள் பல கடந்துவிட்டன , ஆசையாய் இந்த வார்த்தையை உச்சரித்து....

நீ இல்லாமல் வாழ பழகி ஈரைந்து வருடங்கள் ஆகி விட்டது...

உருவத்தில் உன்னை ஒத்தவனாம் நான், ஒப்பிட்டு பார்க்க தான் இல்லை ஓர் புகைப்படம்...

ஆசையாக தான் இருக்கிறது, கோவத்திலும் என்னை கொஞ்சும் நேரத்திலும் உன் குரல் எப்படி இருக்கும் என்று கேட்க... அனால் நினைத்து பார்க்க கூட நினைவில் இல்லை உன் குரல்......

ஒரு மகனாய் நான் எதிர்பார்த்த ஆசைகள் ஏராளம்,
உன் சுண்டு விரல் பிடித்து ஊர் சுற்ற,
உறக்கமில்லா இரவுகளில் ஒருக்களித்து உன்மீது ஒரு கால் போட்டு தூங்க,
இவை அற்பமாய் இருந்தாலும் அதை கூட அனுபவிக்க இயலவில்லை....

அப்பா நீ இல்லாவிட்டாலும், அடையாளமாய் உன் பெயர் என் பெயரோடு என்றும்..........

நீ விட்டு சென்ற விழுது இன்று வேர் ஊன்ற துவங்கி விட்டது, இதை கண்டு கழிக்க நீயும் இல்லை, கொண்டாடி மகிழ நானும் விரும்பவில்லை....

உனக்கு மறு ஜென்மம் வேண்டுமென்றால் மீண்டும் வா இந்த மண்ணுலகிற்கு என் மகனாய்.........

காத்திருக்கிறேன் தந்தையாகும் தருணம் வேண்டி....

-இவண்
அதியமான் அண்ணாதுரை

Sunday, 3 December 2017

அமைதியின் அடையாளம்

மரணம்....

தாய்மடி தவழ்ந்தவர்களை மண் தழுவும் நிகழ்வு...

ஆரவாரத்திலும் அய்யோ எனும் ஓலத்திலும் என்னே அமைதியான தூக்கம்...

வாழ்ந்த வரை கஞ்சனனாலும் ஆயிரம் புழுக்கள் புசிக்க உயிர் நீத்து உடலை உணவாய் தந்த வள்ளள் நீ...

அடடே, தூரத்து சொந்தம் கூட நேரத்துக்கு வந்து விட்டார்கள், ஆவலோடு உன்னை வழியனுப்ப...

உச்சந்தலையில் உறவினர்கள் வைத்த எண்ணெய் வழிய, அதைக் காண்பாவர்களின் கண்ணீர் வழிய, என்னே ஒரு ஆந்த குளியல்...

தேம்பி அழும் உன் குடும்பத்தை தவிற தேநீரையே தேடுகின்றன பல கண்கள்...

அடக்கொடுமையே நெற்றியில் ஒட்டிய ஒத்த ரூபாய்க்கா ஓயாது உழைத்தாய்...

அழுது மனம் மாற்றப் போராடுகிறார்கள் கட்டியவளும் பெற்றவர்களும், கருணை இல்லையா உனக்கு, ஓ!!! காதையும் கட்டி விட்டார்களோ....

சரி, அலங்காரம் முடிந்தது... அடுத்த பயனத்திற்கு பவனி போக வண்டியும் தயார், வழிப்போக்கர்களும் தயார்...

கட்டிய வேட்டியும், ஒட்டிய காசயும் கூட விட்டு வைக்களேயே இந்த வெட்டியான்...

இழந்தது உயிரை மட்டுமல்ல, செய்த பாவம், சேர்த்த பணம், கொண்ட கோபம்... உன் திருமேனி போல நீயும் தூய்மையே, துயில் கொள் உனக்கான ஆறடியில்...

எண்ணத்தின் சாரல்

கரை மீது கடல் கொண்ட காதல் அவ்வப்போது அரவணைத்து திரும்பும் அலை சொல்லும் நுரை வடிவில்....!

=================================

காலம் தோறும் சுற்றி வந்தும் புரியவில்லையோ....
நேரத்தின் மீது நெடிமுள் கொண்ட காதலை....!

=================================

தரிசு நிலமும் தாய்மை அடைந்தது....
காக்கை விதைத்த கருவேலம் விருட்சம் பெற்ற போது...!!

=================================

கார்மேகத்தை கலைத்த காற்று...

நீலமேகம் நீ கலங்குவாய் என்றோ...!!!

அல்ல...

மண் மீது தான் கொண்ட காதலை, மழையாய் நீ நனைப்பாய் என்றோ...!!!

=================================

கூரை நெய்ய  குச்சி எடுத்துச் செல்லும் குருவியைக் கண்டு இரைக்காக சிறையில் வாழும் கூண்டு கிளிக்கு பரிதாபம்.

=================================

என் வருங்கால மகளுக்கு...

நெற்றி வியர்வை நிலத்தை முத்தமிட...
நண்பகலிலும் நாளமெல்லாம் ஓர் நடுக்கம்...

என் ஐம்புலனில் ஒன்று மட்டும் ஓர் ஓசை கேட்டு, கண்ணீருக்கு கதவைத் திறக்க கண்ணுக்கு கட்டளையிட்டது...

ஆம், அப்பா என அழைக்கத் தெறியாமல் அழுகையால் அவள் வருகையை சொல்கிறாள் என் மகள்....

நடுக்கத்தை விடுத்து நடை போடத் துவங்கின கால்கள்...

கருப்போ சிவப்போ என காண துடித்த கண்களின் கண்ணீரை கைக்குட்டை குடிக்க ...

அள்ளி ஆரத்தழுவ ஆயத்தமாயின கைகள்...

ஈரைந்து மாதத்தின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் ஒரு சேர இரு விழியில்...

என் இமைக்கும் இரு நாளிகை பொது விடுமுறை, இமைக்காமல் இருக்க...

கட்டியவளோ கண் மூடி இருக்கிறாள்,
ஆனந்த களிப்போ , ஆணவச் செருக்கோ, எதுவாயினும் என்னவளின் துயில் களைக்க எள்ளளவும் எண்ணமில்லை, இருப்பினும் என் வருகையறிந்து கடைக்கண் காலலளவு திறந்து மூடியது. அவள் கருவிழியில் என் பிம்பம் பதிந்ததா என தெரியவில்லை, ஆனால் என் கண் இடறி அவள் கண்ணம் விழுந்த கண்ணீர் சொல்லியிருக்கும்.

என் மகள், ஒள்ளியாய் ஒருவித சிகப்பில் ஒருக்களித்து படுத்திருக்கிறாள், தாயிடம் இருந்து பிரிந்த சோகமோ, தாமதமாயாய் காண வந்த தந்தையின் மீது கோபமோ, தொப்புளை அறுத்து தொட்டிலில் போட்ட வருத்தமோ, காரணத்தை விடுத்து மறுபுறம் சென்று மகளைக் கண்டேன். அவள் சிறு விழியால் புருவம் சுளித்து எனைப் பார்த்த நொடி, மதி மயங்கி நானும் மழலையானேன்.

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...